பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் தேர்தலை நடத்த தயார்: ஜெலன்ஸ்கி பேச்சு

உக்ரைனில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 2 விசயங்களில் தெளிவு வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.;

Update:2025-12-10 19:25 IST

கீவ்,

உக்ரைன் நாட்டுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன் ரஷியா போர் தொடுத்தது. தொடக்கத்தில் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் படைகள் மீட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை செய்து வருகின்றன.

ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது, உக்ரைனின் ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பியதுடன், உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல், போரை மன்னிப்புக்கான ஒன்றாக பயன்படுத்தி கொள்கிறார் என கூறினார்.

இதுபற்றி ஜெலன்ஸ்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேர்தலுக்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால், தேர்தல் நடைபெற அமெரிக்காவின் உதவி தேவையாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளும் கூட இதற்கு உதவ வர வேண்டும். போர் காலத்தில் பாதுகாப்பாக வாக்குப்பதிவு நடத்த நட்பு நாடுகள் உத்தரவாதம் அளிக்க முன் வருகிறார்கள் என்றால் 60 முதல் 90 நாட்களில் தேர்தலை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது என்று கூறினார்.

உக்ரைனில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 2 விசயங்களில் தெளிவு வேண்டும். முதலில், பாதுகாப்பு விசயம். ராக்கெட், ஏவுகணை தாக்குதலின்போது, அதனை எப்படி நடத்துவது என்பது. மற்றொன்று எங்களுடைய ராணுவ வீரர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்றார். அதனால், பாதுகாப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டால், உக்ரைனில் தேர்தலை நடத்த தயார் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்