சிட்னி தாக்குதல்: துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றி வெளியான திடுக் தகவல்
சாஜித் அக்ரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார், நவீத் அக்ரம் படுகாயமடைந்து மருத்துவமனையில் போலீஸ் காவலில் உள்ளார்.;
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் போண்டி கடற்கரை அமைந்துள்ளது. சுற்றுலாவுக்கு பெயர்போன இந்த கடற்கரை அருகே யூதர்களின் பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான யூதர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது கூட்டத்தை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இதனை பார்த்ததும் உயிர் பயத்தில் மக்கள் அங்கும், இங்குமாக ஓடினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே அலி அகமது (வயது 43) என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மடக்கி பிடித்தார். பின்னர் அவரிடம் இருந்த துப்பாக்கியை அவர் பிடுங்கினார், அப்போது மற்றொரு நபர் சுட்டதில் அலி அகமதுவுக்கு படுகாயம் ஏற்பட்டது.முன்னதாக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:
* தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாஜித் அக்ரம், ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என இந்திய அதிகாரிகள் தரப்பில் தகவல்
*25 ஆண்டுகளுக்கு முன்பே ஹைதராபாத்தை விட்டு வெளியேறிய சாஜித் அக்ரம் ஆஸ்திரேலியாவில் குடியேறி அங்கேயே திருமணம் செய்துகொண்டதாகவும் மொத்தமே 2-3 முறைதான் இந்தியாவிற்கு வந்து சென்றதாகவும் தகவல்
* 50 வயதான சாஜித் அக்ரம், அவரது 24 வயதான மகன் நவீத் அக்ரம் உடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
* சம்பவ இடத்தில் சாஜித் அக்ரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார், நவீத் அக்ரம் படுகாயமடைந்து மருத்துவமனையில் போலீஸ் காவலில் உள்ளார்.
*பயங்கரவாத செயல்களால் ஈர்க்கப்பட்டு அவர் இத்தகைய கொடூரத்தில் ஈடுபட்டதாகவும், இந்தியாவுடனோ அல்லது தெலுங்கானாவில் யாருக்கும் இதற்கு தொடர்பு இல்லை என்று தெலுங்கானா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது