உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி: டிரம்ப் கடும் தாக்கு
வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று ஜெலன்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார்.;
கீவ்,
உக்ரைன்–ரஷியா இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நிலப்பரப்பின் 20 சதவீதத்தை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையேயான போரால் பெரும் அளவு உயிரிழப்புகளும் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, டிரம்ப் பதவியேற்ற பிறகு அமைதி பேச்சுக்களை விரைவுபடுத்தி வருகிறார்.
உக்ரைனிடம் கைப்பற்றிய பிரதேசங்களை ரஷியா திருப்பித் தர மறுக்கிறது; இதை உக்ரைன் ஏற்க மறுக்கிறது. இதனால் மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2019-லேயே முடிவடைந்தது. ஆனால் ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் போர் சட்டம் அமலில் உள்ளதால் தேர்தல் தடைப்பட்டுள்ளது. தற்போது, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்துக்கு உக்ரைன் அதிபர் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இது குறித்து டிரம்ப் கூறியதாவது: “உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் விவகாரத்தில் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அவர்கள் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அது இனி ஜனநாயகம் இல்லாத நிலைக்கு செல்கிறது,” என்றார். மேலும், தேர்தலை காலம் தாழ்த்தவே போரை நீட்டிப்பதாகவும் டிரம்ப் விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஜெலன்ஸ்கி, “உக்ரைனில் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்,” என்றார்.