அமெரிக்க வீரர்கள் படுகொலை... அல்-கொய்தா தொடர்புடைய தலைவரை தாக்கி அழித்த அமெரிக்கா

அமெரிக்க படைகள் கடந்த 16-ந்தேதி நடத்திய தாக்குதலில், பிலால் ஹசன் அல்-ஜசீம் கொல்லப்பட்டார்.;

Update:2026-01-18 11:56 IST

புளோரிடா,

சிரியாவின் பல்மைரா நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரர்கள் அமெரிக்க ராணுவ வீரர்களான எட்கர் பிரையன் டோரஸ்-தோவர், வில்லியம் நதானியேல் ஹோவர்ட் ஆகிய தேச பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் இருந்த மற்றொரு அமெரிக்கரான அயாத் மன்சூர் சகாத் என 3 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின்பேரில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிரியாவின் வடமேற்கே நடந்த தாக்குதலில், அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மூத்த தலைவர் வீழ்த்தப்பட்டு உள்ளார் என அமெரிக்காவின் பாதுகாப்பு படை தெரிவித்தது.

அந்த செய்தியில், கடந்த 16-ந்தேதி அமெரிக்க படைகள் நடத்திய இந்த தாக்குதலில், பிலால் ஹசன் அல்-ஜசீம் கொல்லப்பட்டார். மூத்த அனுபவம் வாய்ந்த பயங்கரவாதியான அவர், அமெரிக்க வீரர்கள் இருவரை கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதியுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என தெரிவித்தது. பயங்கரவாத நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான சதி திட்டங்களில் அவருக்கும் ஒரு பங்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் அமெரிக்க பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை குறி வைத்து கூட்டணி படைகளுடன் சேர்ந்து பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. எங்களுடைய போர் வீரர்களுக்கு துன்பம் ஏற்படுத்தினால், உலகின் எந்த மூலையில் நீங்கள் பதுங்கினாலும், உங்களை கண்டறிந்து கொல்வோம் என்பதே எங்களுடைய வலிமையான செய்தி என தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்