சாம்பியன்ஸ் டிராபி; இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - ஜாகீர் கான் கணிப்பு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கான் தனது கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இதில் சந்தேகமே வேண்டாம். என்னை கேட்டால் இந்திய அணி அரையிறுதிக்கு கண்டிப்பாக வந்து விடும். அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி பலமாக இருக்கிறது. அவர்களும் அரையிறுதிக்கு வந்து விடுவார்கள். இது போன்ற தொடர்களில் நியூசிலாந்து அணி எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். நான்காவது அணியாக தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்தத் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால், பாகிஸ்தான் தற்போது சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதில்லை. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து அவர்கள் ஒரே மாதிரி விளையாடுவதில்லை. அவ்வப்போது தடுமாறுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.