ஐ.பி.எல்.தொடரில் அசத்தினால் டெஸ்ட் அணியில் எப்படி வாய்ப்பு பெற முடியும்..? அஸ்வின் கேள்வி

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

சென்னை,

18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் மே.25-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இந்திய முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார். அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 4-வது வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் (5 ஆட்டங்களில் 243 ரன்) களம் கண்டு இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது ஐ.பி.எல். பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ள அவர் அதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தி வரும் ஸ்ரேயாஸ் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அசத்தும் பட்சத்தில் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஒரு வீரர் ஐ.பி.எல். தொடரில் அசத்தினால் அவருக்கு எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்க முடியும்? என்று இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், " எனக்கு ஒரு விஷயத்தைச் சொல்லுங்கள். நீங்கள் ஐ.பி.எல். தொடரில் நன்றாக விளையாடும் வீரரை எப்படி டெஸ்ட் அணிக்கு அழைக்க முடியும்? ஐ.பி.எல்.-ல் நன்றாக விளையாடுவதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்? ஒரு வீரர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால், அந்த வீரர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து யாராவது ஒரு கட்டுரை எழுதுகிறார்கள். ஒருவர் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டால், மக்கள் டி20 போட்டிகளில் விளையாடுவது பற்றி பேசத் தொடங்குகிறார்கள்.

இதெல்லாம் தவறல்லவா? ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக செயல்பட்டால் உங்களிடம் டி20 ஆட்டம் மட்டுமே மேம்படும். ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சாம்பியன்ஸ் டிராபியில் அவர் காட்டிய பார்மை அவர் ஐ.பி.எல். தொடரிலும் தொடர்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அவர் ஒரு அற்புதமான வீரர். கடந்த சீசனில் கொல்கத்தா பட்டத்தை வெல்வதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com