இந்தியாவுக்கு வர மறுப்பு: வங்காளதேச அணிக்கு கெடு விதித்த ஐசிசி
வங்காளதேச அணி இந்தியா வருவதை தவிர்த்தால் ஸ்காட்லாந்து அணி விளையாடும்.;
டாக்கா ,
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இதையடுத்து, வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.
எந்தவித காரணமும் இல்லாமல் தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த வங்காளதேசம், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியது. அத்துடன் தங்கள் நாட்டில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. மேலும், தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதியது.இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது.
ஆனாலும் இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்காளதேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. தங்களது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தது.
ஆனால் அட்டவணையில் மாற்றம் எதுவும் செய்ய இயலாது என்று ஐ.சி.சி. திட்டவட்டமாக கூறி விட்டது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க வங்காளதேச அணி இந்தியா வரும் விவகாரத்தில் நாளைக்குள் இறுதி முடிவு எடுக்கும்படி வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐ.சி.சி. கெடு விதித்துள்ளது. இந்தியா வந்து விளையாட மறுத்தால் வங்காளதேசத்துக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் இருக்கும் இன்னொரு அணியை சேர்க்க நேரிடும் என்றும் எச்சரித்து இருக்கிறது.
ஒருவேளை வங்காளதேச அணி இந்தியா வருவதை தவிர்த்தால் ஸ்காட்லாந்து அணி விளையாடும்.