இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் 2-வது டெஸ்ட்: கில், சாய் சுதர்சன் விலகல்..?

இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய 'ஏ' அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது.

அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் விளையாடுவார்கள் என்று தொடர் தொடங்கும் முன் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் தவற விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று வரை விளையாடியதால் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்று கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் புறப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com