இந்தியா அபார பந்துவீச்சு.. தென் ஆப்பிரிக்கா 270 ரன்களில் ஆல் அவுட்
ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை தாண்டும் என்று அனைவரும் நினைத்தனர்.;
விசாகப்பட்டினம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் ஆன ரிக்கல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன குயின்டன் டி காக் உடன் கேப்டன் பவுமா கை கோர்த்தார். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டியது.
2-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பவுமா 48 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ பிரீட்ஸ்கே 24 ரன்களிலும், மார்க்ரம் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் பிரசித் கிருஷ்ணா காலி செய்தார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் டி காக் சிறப்பாக ஆடினார். இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட அவர் 80 பந்துகளில் சதம் விளாசினார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அவர் போல்டானார். 89 பந்துகளில் 106 ரன்கள் அடித்த நிலையில் டி காக் அவுட்டானார்.
ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை தாண்டும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் டி காக் ஆட்டமிழந்ததும் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர்.
குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா சிறப்பாக பந்துவீசி தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். பிரெவிஸ் (29 ரன்கள்), மார்கோ ஜான்சன் (17 ரன்கள்), கார்பின் போஷ் (9 ரன்கள்) நிகிடி (1 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் காலி செய்தார்.
47.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 270 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கேஷவ் மகராஜ் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.