ஐ.பி.எல்.2025: புதிய விதி அறிமுகம்

மும்பையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது இந்த புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
image courtesy:twitter/@IPL
image courtesy:twitter/@IPL
Published on

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இதனையொட்டி 10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் நடப்பு சீசனில் புதிய விதி ஒன்றும் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இரவு நேர ஆட்டங்களில் 2-வது இன்னிங்சின்போது பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து ஈரமாகி விடுகிறது. ஈரமான பந்தை பவுலர்களால் சரியாக பிடித்து துல்லியமாக வீச முடிவதில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்குவித்து விடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த ஐ.பி.எல்.-ல் இரண்டு பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது 2-வது இன்னிங்சில் 10-வது ஓவருக்கு பிறகு பந்து வீசும் அணியின் கேப்டன் பந்து அதிகம் ஈரமாகி விட்டதாக நினைத்தால் நடுவரிடம் புதிய பந்து கேட்கலாம். பனியின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நடுவர் ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பந்தை மாற்றுவது குறித்து முடிவு செய்வார். இந்த புதிய விதி நடப்பு சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com