ஐ.பி.எல். 2026: சிஎஸ்கே இல்லை.. இந்த 4 அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் - அஸ்வின் கணிப்பு
19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 26-ம் தேதி தொடங்க உள்ளது.;
சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் 10 அணிகளின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியினரும் தங்களிடம் இருந்த கையிருப்பு தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட வீரரை குறி வைத்து பல்வேறு வியூகங்களுடன் வந்திருந்தனர். ஏலத்தை மும்பைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார். 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி அணிகளை வலுப்படுத்தி விட்டன. இதனால் அடுத்த ஐ.பி.எல். சீசன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த ஐ.பி.எல். சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். ஆச்சரியமளிக்கும் வகையில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அந்த பட்டியலில் அவர் தேர்வு செய்யவில்லை.
அஸ்வினின் கணிப்பின் படி, மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிவித்துள்ளார்.