ஐ.பி.எல். தகுதி சுற்று 2: பஞ்சாப் அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.
ஐ.பி.எல். தகுதி சுற்று 2: பஞ்சாப் அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
Published on

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இதையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதற்கிடையில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மழை பெய்ததன் காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 7.30 மணியளவில் தொடங்க வேண்டிய ஆட்டம் சுமார் 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.

இதையடுத்து மும்பை அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 8 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து வந்த திலக் வர்மாவுடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டது.

இதில் பேர்ஸ்டோ 38 ரன்களில் ஜோஸ் இங்கிலிஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா, 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 15 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

அதிரடியாக விளையாடி அரைசதம் நோக்கி முன்னேறிய சூர்யகுமார் யாதவ், 44 ரன்கள் எடுத்த நிலையில் நேஹல் வதேரா பந்துவிச்சில் விக்கெட்டை இழந்தார். 7 பவுண்டரிகளை விளாசிய நமன் திர், 18 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com