வைபவ் சூர்யவன்ஷிக்கு உயரிய விருதை வழங்கி கவுரவித்த ஜனாதிபதி
தனது சாதனைகளால் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகில் பேசப்படும் ஒரு வீரராக உருவெடுத்துள்ளார்.;
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 35 பந்தில் செஞ்சுரி அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (வயது 14) பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். ஐபிஎல் தொடரை தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி இந்திய ஏ அணிக்கு விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரில் அதிரடியாகி விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.தனது சாதனைகளால் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகில் பேசப்படும் ஒரு வீரராக உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. 'பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' என்ற விருதை வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார் .
'பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' என்ற விருது 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் வீரம், கலை, கலாசாரம், சுற்றுச்சூழல், புத்தாக்கம், அறிவியல் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் நிகழ்த்தும் அசாத்திய சாதனைகளுக்காக சிறுவர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிரதமர் மோடியை இன்று இரவு வைபவ் சூர்யவன்ஷி சந்திக்க உள்ளார்.