டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கம்: தேர்வுக்குழு முடிவை மதிக்கிறேன் - கில்
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான சுப்மன் கில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.;
சென்னை,
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில், கில் இடம் பெறவில்லை.இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான சுப்மன் கில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கில் கூறியதாவது,
நான் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு நிற்கிறேன். என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதனை யாராலும் தடுக்க முடியாது.ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை தீவிரமாக முயற்சித்து வருகிறேன். தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, இந்திய அணிக்கு எது நன்மையோ, அதனை எடுத்திருக்கிறார்கள். அவர்களின் நான் முடிவை மதிக்கிறேன். என தெரிவித்தார்.