கபில்தேவ், தோனி போல அணியில் மாற்றத்தை கொண்டு வந்தவர் ரோகித் - இந்திய முன்னாள் வீரர் புகழாரம்

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
image courtesy:  twitter/@BCCI
image courtesy:  twitter/@BCCI
Published on

பெங்களூரு,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் கங்குலி, தோனிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்தார். அத்துடன் டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐ.சி.சி. கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற தோனியின் மகத்தான சாதனையை அவர் சமன் செய்தார்.

இந்நிலையில் கபில் தேவ், தோனி போல ரோகித் சர்மா தனது வழியில் இந்திய கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. ரோகித், தோனி, கபில்தேவ் ஆகிய ஒவ்வொருவரும் இந்திய கிரிக்கெட்டில் ஒரு தலைமுறை மாற்றத்தையும், மனநிலையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தினர். தனது ஓய்வு பற்றி ரோகித் சர்மா வெளிப்படையாக பேசியது அவர் எந்தளவுக்கு தெளிவான நபர் என்பதை குறிக்கிறது. தனது ஓய்வு பற்றி அவர் மிகவும் ஜாலியாக பேசினார். அதே சமயம் எனது ஓய்வு பற்றி கேட்காதீர்கள் அதை உணரும்போது நானே அறிவிப்பேன் என்ற செய்தியையும் அவர் அனைவரிடமும் கொடுத்துள்ளார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com