ஸ்ரேயாஸ் ஆடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது - ஹர்திக் பாண்ட்யா

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
Image Courtesy: @IPL
Image Courtesy: @IPL
Published on

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஹர்திக் தலைமையிலான மும்பை மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தலா 44 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஸ்ரேயாஸ் ஆடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் நாங்கள் இன்று தோல்வியை தழுவி விட்டோம். தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு விளையாடி இருக்கிறார். நாங்கள் அடித்த ரன் இந்த ஆடுகளத்திற்கு சரியான இலக்கு தான்.

ஆனால், எங்கள் பந்து வீச்சு படை திட்டங்களை சரியான முறையில் களத்தில் செயல்படுத்தவில்லை. பஞ்சாப் அணி கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல் அமைதியாக களத்தில் இருந்து எங்களை நெருக்கடியில் ஆளாக்கினார்கள். எங்கள் திட்டத்தை நாங்கள் நினைத்தது போல் சரியாக செயல்படுத்த முடியவில்லை. பும்ரா எங்களை பல்வேறு போட்டிகளில் நெருக்கடியான கட்டத்தில் காப்பாற்றி இருக்கிறார். ஆனால் அவரால் கூட இன்று முடியவில்லை.

ஒருவேளை பும்ராவை இன்னும் முன்பாக நான் பந்து வீச வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இறுதி போட்டிக்கு போக முடியாதது நிச்சயம் ஏமாற்றத்தை அளிக்கின்றது. எங்கள் அணி வீரர்கள் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். பஞ்சாப் அணிக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com