இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.;
கொல்கத்தா,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறக்கிய இந்தியா 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
இதனிடையே, முதல் இன்னிங்சில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். பின்னர், 35வது ஓவரில் மீண்டும் களமிறக்கிய நிலையில் அவருக்கு கழுத்து பகுதியில் லேசான வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், சுப்மன் கில் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழுத்து வலியால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றிரவு முழுவதும் சுப்மன் கில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.