டி20 உலகக் கோப்பை: சுப்மன் கில் இடம்பெறாதது ஏன்..? தேர்வுக்குழு தலைவர் விளக்கம்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.;
மும்பை,
10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கொண்டு அணியை தேர்வு செய்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடருகிறார். ஆனால் அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் இடம்பெறவில்லை. துணை கேப்டன் பொறுப்பு அக்சர் படேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விக்கெட் கீப்பர் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன், ரிங்கு சிங் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இதில் சுப்மன் கில் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக உள்ள அவரை ஆல் பார்மட் கேப்டனாக்கும் நோக்கில் டி20 துணை கேப்டன் பதவியை பி.சி.சி.ஐ. அவருக்கு கொடுத்தது.
ஆனால் அவர் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. தொடர்ந்து மோசமான பார்மில் தடுமாறி வந்தார். அதன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டது ஏன்? என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “சுப்மன் கில் தற்போது ரன்கள் குறைவாக அடித்து வருகிறார். கடந்த உலகக் கோப்பையையும் அவர் தவறவிட்டார். நீங்கள் அணியின் சேர்க்கைகளைப் பார்க்கிறீர்கள். உங்கள் விக்கெட் கீப்பர் (சஞ்சு சாம்சன்) தொடக்க வரிசையில் பேட்டிங் செய்யப் போகிறார். சுப்மன் கில்லை தவறவிடுவது துரதிர்ஷ்டவசமானது. நீங்கள் 15 பேரைத் தேர்ந்தெடுக்கும்போது யாரையாவது தவறவிட வேண்டும்” என்று கூறினார்.
இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.