2 நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புலம்பல்
ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.;
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.இரண்டே நாளில் போட்டி முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இரண்டே நாளில் இந்த போட்டி முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பெர்த்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் 2 நாளில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிவது நல்லதல்ல என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
முதல் நாளில் 20 விக்கெட்டுகள் விழுந்தது என்பது ரொம்பவே அதிகம். அதை நினைத்து இரவில் சரியாக தூங்கவில்லை. தொடக்க நாளில் ரசிகர்களின் வருகையில் புதிய சாதனை படைத்தோம். அது அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் அந்த அனுபவத்தை ஒவ்வொரு நாளும் எங்களால் தொடர்ந்து வழங்க முடியும் என்பதை உறுதி செய்வதே அனைவருக்கும் உள்ள சவாலாகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டென்று முடியாமல் நீண்ட நேர செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். குறுகிய கால டெஸ்ட் போட்டிகள் வணிகத்துக்கு மோசமானவை. எனவே பந்துக்கும், பேட்டுக்கும் இடையே இன்னும் கொஞ்சம் பரந்த சமநிலையை காண விரும்புகிறேன். ஆடுகளம் தயாரிப்பில் நாங்கள் தலையிடுவதில்லை. ஆனால் கோடை கால போட்டித் தொடர்களில் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்’ என்றார்.