தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு முக்கியமானது - சிராஜ் பேட்டி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன் என முகமது சிராஜ் கூறியுள்ளார்.;

Update:2025-11-12 08:11 IST

Image Courtesy: IPL 

கொல்கத்தா,

இந்தியாவுக்கு வந்துள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரம் வலை பயிற்சிக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், உதவி பயிற்சியாளர்கள் மோர்னே மோர்கல், சிதான்ஷூ கோடாக் ஆகியோர் ஆடுகளத்தன்மையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜீயிடமும் சிறிது நேரம் பேசினர்.

பழுப்பு நிறத்தில் காணப்படும் ஆடுகளத்தில் ஆங்காங்கே லேசாக புற்கள் உள்ளன. ஆடுகளம் முழுக்க முழுக்க சுழலுக்கு உகந்த வகையில் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக எந்த வேண்டுகோளும் இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து வரவில்லை என பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் சவுரவ் கங்குலி ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளார்.

‘பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசம வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆடுகளம் இருக்கும். போக போக ஆடுகளத்தில் பந்து சுழன்று திரும்பும். பவுன்சும் இருக்கும். பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் இரண்டு தரப்புக்குமே ஆடுகளம் கைகொடுக்கும்’ என பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜீ தெரிவித்தார்.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு ஆயத்தமாகும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்த தொடர், 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக தென்ஆப்பிரிக்க அணி, நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வந்திருக்கிறார்கள். சமீபத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். நாங்களும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு சமன் செய்தோம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினோம். நல்ல பார்மில் இருப்பதால் நாங்களும் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் எனது பந்து வீச்சில் நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதை தொடர்வதை எதிர்நோக்கி உள்ளேன். வலுவான அணிக்கு எதிராக ஆடுவது எனது பந்து வீச்சை மேம்படுத்திக் கொள்ள உதவும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்’ என்றார்.

டெல்லி கார்வெடிப்பு சம்பவத்தையடுத்து கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல், மைதானத்திற்கு செல்லும் வழி, பயிற்சி கூடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மனோஜ் வர்மா, மைதானத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். போட்டி நடக்கும் 5 நாட்களும் ஸ்டேடியம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்