சிஎஸ்கே ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்: மைக் ஹசி

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது
சிஎஸ்கே ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்: மைக் ஹசி
Published on

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்தது. சென்னை தரப்பில் துபே 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 44 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. இதன்படி கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் ஐ,பி.எல். தொடரின் தனது 3 வெற்றியை பதிவு செய்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தொடர்ந்து 5 -வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை அணி பேட்டிங் பயிற்சியளர் மைக் ஹசி கூறியதாவது

முதல் நாள் முதல் எங்கள் ரசிகர்கள் மிகவும் சிறப்பானவர்களாக இருந்து வருகின்றனர், அவர்கள் தொடர்ந்து எங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய நல்ல நேரங்களில் இருந்துள்ளார்கள். இப்போது விஷயங்கள் சரியாகத் இல்லாதபோதும் அவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். என தெரிவித்தார் . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com