சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தா மீண்டும் தோல்வி
மாஸ்டர்ஸ் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.;
கோப்புப்படம்
விஜ்க் ஆன் ஜீ,
டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான தமிழக வீரர் பிரக்ஞானந்தா 60-வது காய் நகர்த்தலில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் அப்துசத்தோரோவிடம் தோல்வி அடைந்தார். பிரக்ஞானந்தா தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசியிடம் வீழ்ந்து இருந்தார்.
வெள்ளை நிற காய்களுடன் ஆடிய உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், நெதர்லாந்து வீரர் ஜோர்டென் வான் பாரஸ்ட்க்கு எதிரான ஆட்டத்தில் 33-வது நகர்த்தலில் ‘டிரா’ கண்டார். இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி - செக்குடியரசின் தாய் டாய் வான் இடையிலான ஆட்டம் 56-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதே போல் அனிஷ் கிரி (நெதர்லாந்து) - ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) மோதிய ஆட்டம் 44-வது நகர்த்தலில் டிரா ஆனது.
2-வது சுற்று முடிவில் ஹான்ஸ் மோக் நிமான் (அமெரிக்கா), நோடிர்பெக் அப்துசத்தோரோவ் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் தலா 1½ புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.