உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் சம்ரத் ராணா தங்கம் வென்று அசத்தல்
மற்றொரு இந்திய வீரரான வருண் தோமர் வெண்கலப்பதக்கம் வென்றார்.;
image courtesy: twitter/@issf_official
கெய்ரோ,
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சம்ரத் ராணா அசத்தினார். அவர் 8 பேர் இடையிலான இறுதி சுற்றில் மொத்தம் 243.7 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சீனாவின் ஹூ காய் 243.3 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், இந்திய வீரர் வருண் தோமர் 221.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 6 தங்கம் உள்பட 12 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது.