உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கம்
இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் வென்று பதக்கபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.;
கெய்ரோ,
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பந்தயத்தில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 466.9 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். சீன வீரர் யுகுன் லூ 467.1 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பிரான்ஸ் வீரர் ரோமைன் (454.8 புள்ளி) வெண்கலப்பதக்கம் பெற்றார். மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (432.6) 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முன்னதாக தகுதி சுற்றில் ஐஸ்வரி பிரதாப் சிங் 597 புள்ளிகள் குவித்து உலக சாதனையை சமன் செய்தார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் இஷா சிங்-சம்ரத் ராணா இணை 10-16 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் கியான்சூன் யாவ்-காய் ஹூ ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. இதுவரை இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் வென்று பதக்கபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 9 தங்கம் உள்பட 15 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது.