பெங்களூரு

திருட்டு, கொள்ளை வழக்கில் 20 பேர் கைது

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்கில் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி வாகனங்கள், நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

20 பேர் கைது

பெங்களூரு ஒயிட்பீல்டு மண்டலத்தில் உள்ள எச்.ஏ.எல், காடுகோடி, கே.ஆர்.புரம், மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், ஒயிட்பீல்டு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நகரில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்துள்ளனர். இவற்றில் எச்.ஏ.எல். போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பெங்களூருவில் பொதுமக்களிடம் இருந்து கார்களை வாங்கி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வந்த சரண்ராஜ் என்ற நாகராஜ் (வயது 34) என்பவரை கைது செய்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.1 கோடி மதிப்பிலான 8 விலை உயர்ந்த கார்கள், 5 கேமராக்கள் மீட்கப்பட்டுள்ளது.

ரூ.1.65 லட்சம் மதிப்பு

இதுதவிர காடுகோடி, கே.ஆர்.புரம், மாரத்தஹள்ளி, பெல்லந்தூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்த 19 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 45 இருசக்கர வாகனங்கள், 135 செல்போன்கள், ஒரு மடிக்கணினி, 150 கிராம் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.65 லட்சம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ஒயிட்பீல்டு மண்டல போலீசார், 20 நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1.65 கோடி மதிப்பிலான நகைகள், வாகனங்கள், பொருட்களை மீட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT