மும்பை

கன்டெய்னர் லாரி மீது கார் மோதி சிறுமி உள்பட 4 பேர் பலி - ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

அகமதுநகர்-புனே நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதி சிறுமி உள்பட 4 பேர் பலியாகினர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

புனே, 

அகமதுநகர்-புனே நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதி சிறுமி உள்பட 4 பேர் பலியாகினர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

மோதி விபத்து

பீட் மாவட்டம் பட்டோடா தாலுகா தோமரி பகுதியை சேர்ந்தவர் சுதாம் போந்துவே (வயது66). இவர் தனது குடும்ப உறுப்பினர்களான சிந்துபாய்(60), கார்திகி (வயது30), சிறுமி ஆனந்தி(2) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலையில் புனே நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அகமதுநகர்-புனே நெடுஞ்சாலை காரேகாவ் பகுதியில் கார் வந்தபோது திடீரென சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறமாக கார் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து போனதால் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

4 பேர் பலி

தகவல் அறிந்த சிரூர் போலீசார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 வயது சிறுமி உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான சுதாம் போந்துவே பீட் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் நடத்தி வந்தார் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SCROLL FOR NEXT