இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன. இந்திய சினிமாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கலை பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்
அந்தவகையில் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2024-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன
இந்த விருதுப் பட்டியலில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் பல முக்கியப் பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இதில், கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற ‘அமரன்’ திரைப்படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கிய ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை ராஜ்குமார் பெரியசாமி தட்டிச் சென்றுள்ளார்.
‘அமரன்’ திரைப்படத்திற்கு ஆக்ரோஷமும் காதலும் கலந்த உலகத்தரம் வாய்ந்த பின்னணி இசையை வழங்கியதற்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
‘அமரன்’ திரைப்படத்தின் நேர்த்தியான படத்தொகுப்பிற்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் ஆர்.கலைவாணன்.