சென்னை,
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார்.
சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவும், நவின் நூலி படத்தொகுப்பும் செய்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் நாக் வம்சி ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்துள்ளார். அதாவது, நான் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தை முழுமையாக பார்த்துவிட்டேன். 200 சதவீதம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமையும். இது ஒரு முழுமையான குடும்பத் திரைப்படம். திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.. படம் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளது.என தெரிவித்துள்ளார்.