சினிமா செய்திகள்

ஸ்வேதா மேனன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... கேரள திரையுலகில் பரபரப்பு

'அம்மா' சங்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்வேதா மேனன் மீது புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள திரைப்பட நடிகர் சங்கமான 'அம்மா' (AMMA)-வில் கடந்த சில மாதங்களாக நிர்வாகம், நிதி முறைகேடு மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்த நிலையில், சங்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்வேதா மேனன் மீது புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்வேதா மேனன் மீது குற்றச்சாட்டுகள்

கடந்த மாதம் நிதி முறைகேடு புகாரின் எதிரொலியாக, ஸ்வேதா மேனன் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பேர் கொண்ட நிர்வாகக் குழு ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தது. இதையடுத்து தற்காலிக பொதுக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்வேதா மேனன் தொடர்ந்த வழக்கில், அந்த தற்காலிக குழுவின் செயல்பாட்டுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இதற்கிடையே நடிகைகள் அன்சிபா, உஷா ஹசீனா உள்ளிட்டோர், ஸ்வேதா மேனன் மற்றும் நடிகை லட்சுமி பிரியா மீது மத ரீதியான கருத்துகளை பயன்படுத்தியதாகவும், ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

'அதானி நன்கொடை' சர்ச்சைக்கு ஸ்வேதா மேனன் விளக்கம்

இந்த விவகாரத்தில் நடிகை மாலா பார்வதி, ஸ்வேதா மேனன் தொடர்ந்து 'அம்மா' அமைப்பின் தலைவராக இருந்தால், அதானி குழுமம் ரூ.15 கோடி நன்கொடை வழங்கும் வாய்ப்பு குறித்து பா.ஜ.க. தலைவர் பத்மஜா மேனன் பேசியதாகக் கூறப்படும் வீடியோவை வெளியிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஸ்வேதா மேனன், "முன்னாள் நிர்வாகிகளின் முறைகேடுகள் குறித்து நான் பேசிய பிறகுதான் என் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், கோவில், தேவாலயம், அம்பானி அல்லது அதானி என யாரிடமிருந்து நிதி வருகிறது என்பதை நாங்கள் ஒருபோதும் பார்க்கவில்லை. உதவி செய்ய முன்வருபவர்களின் ஆதரவை மட்டுமே ஏற்றுக்கொண்டோம்" என்று விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் எஸ். சுரேஷ் கூறுகையில், "ஸ்வேதா மேனன் ஒரு தேசியவாதி; பிரதமர் நரேந்திர மோடியின் மீது மரியாதை கொண்டவர். ஆனால் அவர் பா.ஜ.க. உறுப்பினர் அல்ல. திரைப்படத் துறையின் அமைப்புகளை அரசியலுடன் இணைத்து பார்க்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

இதனால், கேரள திரைப்பட நடிகர் சங்கமான 'அம்மா'-வில் நிலவி வரும் நிர்வாக மற்றும் அரசியல் சர்ச்சைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.