சென்னை,
பிரபல பாலிவுட் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கவிருக்கும் புதிய வெப் தொடரில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தனது கடின உழைப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். விக்ரம், அஜித், விஜய், நாகார்ஜுனா, பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
20 ஆண்டுகளை கடந்தும் நாயகியாக நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள 'சதுரங்க வேட்டை 2, கர்ஜனை" ஆகிய படங்கள் இன்னும் வெளியாகாமல் பல ஆண்டுகளாக முடங்கி உள்ளன. தவிர தெலுங்கில் சிரஞ்சீவி உடன் ஒரு படமும் (விஸ்வம்பரா), மலையாளத்தில் மோகன்லால் உடனும் (ராம்) நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை திரிஷா விரைவில் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் ஈடுபடப் போவதாக தகவல்கள் பரவிய நிலையில் புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பிரபல பாலிவுட் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கவிருக்கும் புதிய வெப் தொடரில் திரிஷா நடிக்க உள்ளதாகவும் முழுக்க முழுக்க 'சூப்பர் நேச்சுரல் திரில்லர்' (Supernatural Thriller) கதைகளத்தில் உருவாகும் இந்த வெப் தொடர், முற்றிலும் நாயகியைப் பிரதானப்படுத்தி (Female-centric) உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அரசியலுக்கு திரிஷா செல்லப் போகிறார் என்ற தகவல்களுக்கு மத்தியில், அவர் தொடர்ந்து சினிமா பணிகளில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.