சென்னை,
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 17-ந் தேதி வெளியான திரைப்படம் 'தி ஒடிசி'. கிரேக்க இலக்கிய காவியமான 'ஒடிசி'யை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க காவியத்தில் சிறப்பானதாக பார்க்கப்படும் டிரோயன் போரின் பங்கேற்ற ஒடிசியஸ் என்ற மன்னனை முதன்மைப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
அந்த போருக்கு பின் ஒடிசியஸ் நாடு திரும்பும் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதைக்களம். 250 மில்லியன் அமெரிக்க டாலரில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,500 கோடி) தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியான ஒரு வார காலத்தில் சுமார் 727.9 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.6,000 கோடிக்கும் அதிகமாக) வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஒடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம், இந்தியா முழுவதும் சுமார் 1,500 காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தி ஒடிசி படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படத்தை பற்றி பாராட்டிப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், "ஹோமர் கனவு கண்டார். நோலன் முடிக்க நினைத்தார். நான் மனதாரப் பாராட்டுகிறேன். சினிமாவின் குழந்தைகளே, இந்தத் திரைப்படம் காலம் கடந்து நிற்கும். கட்டாயம் பாருங்கள்! தி ஒடிசி உலகம் முழுவதும் தனது காவியப் பயணத்தைத் தொடரும் வேளையில், அதற்கான எனது புகழ் கவிதை இந்தியாவின் திரையரங்குகளில் பார்வையாளர்களைச் சென்றடையவுள்ளது. அதை விரைவில் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.