சினிமா செய்திகள்

‘நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது’ - இயக்குநர் மிஷ்கின்

தன்னுடைய எந்த படத்தையும் விருதுகளுக்காக இதுவரை அனுப்பியதே கிடையாது என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் இயக்குநர் மிஷ்கின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“ஒரு நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது. விருது என்பது ஒரு ஊக்கம்தான். தங்கலானுக்கு கிடைக்கவில்லை, வாழைக்கு கிடைக்கவில்லை என்றெல்லாம் நாம் குறைசொல்லக் கூடாது. மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் எல்லாம் விருதுகளுக்காக படம் எடுப்பவர்கள் கிடையாது. விருதுகள் கிடைக்கும்போது சந்தோஷப்படுவோம். நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பக்கத்தில் இருக்கும் நமது சகோதரனுக்கு தானே கிடைக்கிறது.

நான் என்னுடைய எந்த படத்தையும் விருதுகளுக்காக அனுப்பியதே கிடையாது, இனியும் அனுப்பமாட்டேன். மக்கள் நமது படத்தை டிக்கெட் வாங்கி பார்த்து வெற்றிப்படமாக ஆக்கிவிட்டார்கள் என்றால் அதைவிட பெரிய விருது என்ன இருக்கிறது?”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.