சென்னை,
'டாக்சிக்' படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பங்களையோ அல்லது 'ஸ்பாய்லர்களையோ' (spoilers) வெளியிட்டு மற்றவர்களுக்கு அந்த அனுபவத்தைக் கெடுத்துவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
'கே.ஜி.எப்' படங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள யாஷ், தற்போது 'டாக்சிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கேங்ஸ்டர் டிராமா திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இன்று உலகளவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'டாக்சிக்' படக்குழு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'டாக்சிக்' என்பது எங்களுக்கு வெறும் ஒரு திரைப்படம் மட்டுமல்ல; ஒவ்வொரு காட்சியமைப்பிலும், ஒவ்வொரு தேர்விலும் நாங்கள் உருவாக்கிய ஒரு உலகத்திற்காக, பல ஆண்டுகளாக நாங்கள் செலுத்திய அன்பின் வெளிப்பாடு இது. இந்தப் படத்தை உருவாக்கிய மற்றும் வெளியிடும் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர், பிற கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரின் விருப்பமும், நீங்களும் அதே போன்றதொரு அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே. திரையரங்கில் ஒரு சமூகமாக இணைந்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட அனுபவம் இது.
இந்தப் படத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பு, உற்சாகம் மற்றும் முன்பதிவுகளில் (advance bookings) நாங்கள் காணும் அமோக வரவேற்பு ஆகியவை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு எங்களுக்கு முக்கியமானது. எங்கள் பயணத்தில் நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி.
உங்களிடம் நாங்கள் மனதாரக் கேட்டுக்கொள்ளும் ஒரு விஷயம் இதுதான்: இந்தப் படம் எந்த விதத்தில் உங்களைச் சென்றடைய வேண்டுமோ, அதே விதத்தில் அந்த அனுபவத்தை முழுமையாகப் பெற அனுமதியுங்கள். திரையரங்கில் படக்காட்சிகளைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிராதீர்கள்; கதையின் முக்கியத் திருப்பங்களையோ அல்லது 'ஸ்பாய்லர்களையோ' (spoilers) வெளியிட்டு மற்றவர்களுக்கு அந்த அனுபவத்தைக் கெடுத்துவிடாதீர்கள். அடுத்த நபரும் 'டாக்சிக்' உலகின் அனுபவத்தை, நீங்கள் உணர்ந்த அதே விதத்தில் நேரடியாகப் பெறட்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.