லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்திலும், மேலும் கமல்ஹாசனுடன் இணைந்து 'கே.எச்.எக்ஸ்.ஆர்.கே.' படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2019-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்பராஜ், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக ஒரு புதிய கதை தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ரஜினிகாந்தின் வரிசையில் 'தலைவர் 173' மற்றும் ரஜினி-கமல் இணையும் படம் உள்ளிட்ட முக்கிய படங்கள் இருப்பதால், அவை முடிந்த பிறகே தங்களது கூட்டணி மீண்டும் அமையுமா என்பது தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.