சென்னை,
கிரைம்-திரில்லர் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகும் 'ஆகன்யா' திரைப்படத்தில் நடிகைகள் சுப்ரா அய்யப்பா மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது 'ஆகன்யா' என்ற புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. திருமலை சிவம் தயாரிக்கும் இந்த படத்தை ஜவஹர் பரமசிவம் இயக்குகிறார். கிரைம்-திரில்லர் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஆகன்யா' படத்தில் நடிகைகள் சுப்ரா அய்யப்பா மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கதையின் மையமாக இருவரின் கதாபாத்திரங்களும் அமைந்துள்ளதால், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
படம் குறித்து இயக்குனர் ஜவஹர் பரமசிவம் கூறுகையில், "அதிரடி மற்றும் ஆக்ஷன் நிறைந்த இந்த படத்தில் சுப்ரா அய்யப்பா ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார். அதேபோல், சாதுரியமான கதாபாத்திரத்தில் சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும், ரசிகர்களை கவரும் வகையில் ஒரு குத்துப்பாடலிலும் சிருஷ்டி டாங்கே சிறப்பாக நடனமாடியுள்ளார்" என்றார். மேலும் பேசிய இயக்குனர், "இரு கதாநாயகிகளும் போட்டி போட்டு சிறப்பாக நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படம் ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கதிரவன் ஒளிப்பதிவிலும், சுபாஷ் சந்திரன் இசையிலும் உருவாகும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் மால்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.