சினிமா செய்திகள்

ரஜினியின் 'தர்மன்' படத்தில் அதிரடி ஆரம்பம்... வெளியான புதிய தகவல்

'தர்மன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் தனது பகுதிகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கம்... கமல்ஹாசன் தயாரிப்பு

தற்காலிகமாக 'தலைவர் 173' என அழைக்கப்பட்ட இப்படத்திற்கு தற்போது 'தர்மன்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

நட்சத்திர பட்டாளம் இணையும் 'தர்மன்'

இப்படத்தில் பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நடிகை சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சண்டைக் காட்சிகளுக்கு பிரபல ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவ் சகோதரர்கள் பணியாற்றுகின்றனர்.

மருத்துவராக ரஜினி... ஆக்சன் கதைக்களம்

ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் 'தர்மன்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கிறார். இந்த படம் 'படையப்பா' மற்றும் 'வேட்டையாடு விளையாடு' படங்களின் கலவையைப் போன்ற அனுபவத்தை தரும் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

சென்னையில் முழுவீச்சில் நடைபெறும் படப்பிடிப்பு

இந்த நிலையில், 'தர்மன்' படம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னையிலேயே படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் அமைப்பில் உருவாகும் ரஜினிகாந்தின் பிரமாண்ட அறிமுகப் பாடல் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் 'தர்மன்' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் அடுத்தகட்ட அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.