சென்னை,
தமிழக முதல் அமைச்சர் விஜய்யை திரைப்பிரபலங்கள் பலரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்கள். நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்தார். அதேபோல, நடிகை வரலட்சுமியும் அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ்யுடன் முதல் அமைச்சரை சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் வரலட்சுமி பதிவிட்டு இருப்பதாவது: இந்த பதிவைப் பற்றி என்ன சொல்லலாம் என்று நிறைய யோசித்தேன். ஆனால் ஏற்கனவே பலரும் பல விஷயங்களைச் சொல்லிவிட்டார்கள். எனவே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். மக்கள் 100 விதமாகப் பேசலாம். ஆனால் இறுதியில் விஜய் நம்முடைய முதல்வர். அவர் இங்கேதான் இருக்க போகிறார். முதல் முயற்சியிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக வருவது மிகுந்த தைரியம், உறுதி மற்றும் தமிழக மக்களின் பேரன்பு இருந்தால்தான் சாத்தியம். இந்தப் பொறுப்பை அனைவரும் மதிக்க வேண்டும். வார்த்தைகளை விட செயல்கள்தான் முக்கியம். குறை கூறுபவர்கள் உண்மை வெளிப்படும்வரை பொறுமையுடனும் மரியாதையுடனும் காத்திருக்க வேண்டும்.
நான் எப்போதும் விஜயின் தீவிர ரசிகைதான். எப்போதும் அப்படித்தான் இருப்பேன். எங்களை சந்தித்து நீண்ட நேரம் செலவிட்டதற்கு நன்றி. 'சர்கார்' படப்பிடிப்பு தளத்தில் நான் கூறிய விஷயத்தை நினைவுகூர்ந்து நாங்கள் சிரித்துப் பேசினோம். அப்போதே இது அவருடைய பயணம் என்று எனக்குத் தெரிந்தது. அவர் எப்போதும் அன்பாகவும் எளிமையாகவும் இருக்கிறார். பெண்கள் நலன் தொடர்பான சில முக்கிய விஷயங்களையும் அவருடன் விவாதித்தோம். தமிழக மக்களுக்காக சிறப்பான மாற்றங்கள் நடைபெறுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும். அவரது தலைமையில் தமிழக மக்கள் வளம் பெற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.