சினிமா செய்திகள்

‘பிளாஸ்ட்’ பட விழாவில் முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் அர்ஜுன்

வரலாறு காணாத வெற்றி பெற்ற தனது நண்பர் முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாக அர்ஜுன் கூறினார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே.ராஜ், நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.

இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அப்பா-மகள் உறவை மையமாகக் கொண்டு, ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு கே.ஜி.எப். படத்தின் இசையமைப்பாளரான ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

‘பிளாஸ்ட்’ திரைப்படம் வரும் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ‘பிளாஸ்ட்’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்த்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அர்ஜுன், “வரலாறு காணாத வெற்றியோடு, சாதனையாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும், எனது நண்பரான மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.