சினிமா செய்திகள்

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் முக்கிய சாட்சிகளின் விசாரணைக்கு மட்டும் ஆஜராக அனுமதி

முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடக்கும் நாட்களில் மட்டும் தர்ஷன் நேரில் ஆஜராக அனுமதிக்கப்படுவார்.

பெங்களூரு,

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் முக்கிய சாட்சிகளின் விசாரணைக்கு மட்டும் நேரில் ஆஜராக அனுமதி வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தர்ஷன் மனு

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த கொலை வழக்கு விசாரணை பெங்களூரு 59-வது சிட்டிசிவில் கோர்ட்டில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் நடந்து வருகிறது. சாட்சிகளிடம் நடக்கும் விசாரணையை சிறையில் இருந்து நேரில் வந்து பார்க்க நடிகர் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் பாதுகாப்பு பிரச்சினை கருதி, சிறையில் இருந்த படியே காணொலி காட்சி மூலமாக கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராக 59-வது சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டு, தர்ஷனின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தர்ஷன் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீசானந்தா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

பரப்பன அக்ரஹாரா வளாகத்தில்...

அப்போது தர்ஷன் தரப்பில் ஆஜரான வக்கீல், சாட்சிகளிடம் நடக்கும் விசாரணையின் போது நேரில் ஆஜரானால் வக்கீலை சந்திக்க முடியும். சாட்சிகள் அளிக்கும் தகவல்களை அறியமுடியும் என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வக்கீல், தர்ஷன் ஒரு நடிகர். அவரை பார்க்க கோர்ட்டுக்கு ரசிகர்கள் வருவதால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என வாதிட்டார். உடனே குறுக்கிட்ட நீதிபதி தற்போது தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து விட்டது.

கோர்ட்டு விசாரணைக்கு முன்பாக 15 நிமிடங்கள் காணொலி காட்சி மூலமாக பேச அனுமதிக்கப்படுவார். அவர் பேசுவது யாருக்கும் கேட்காமல் செய்யப்படும். இல்லையெனில், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடத்தலாம். இதற்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான 3 வழக்கு விசாரணை நடைபெற்றிருந்தது. அங்கு தர்ஷன் ஆஜராவதில் பிரச்சினை ஏற்படாது என நீதிபதி கூறினார்.

முக்கிய சாட்சிகளிடம்...

இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். பரப்பன அக்ரஹாரா கோர்ட்டுக்கு மாற்றினால் வக்கீல்களும், சாட்சிகளுக்கும் தொந்தரவு ஏற்படும் என அரசு வக்கீல் கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீசானந்தா, சிட்டிசிவில் கோர்ட்டில் முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடக்கும் நாட்களில் மட்டும் தர்ஷன் நேரில் ஆஜராக அனுமதிக்கப்படுவார்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செசன்சு கோர்ட்டு பதிவாளர் மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணை எப்போது நடக்கும் என்பது பற்றி ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறி, விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT