சினிமா செய்திகள்

மாதவிடாயை பெண்கள் ஒரு பிரச்சனையாக பேசுவது சரியா? - நடிகை ஸ்ரீலீலா

நடிகை ஸ்ரீலீலா நிகழ்ச்சி ஒன்றில் மாதவிடாய் குறித்து பேசியது கடுமையான விமர்சனங்களை அவருக்கு எதிராக கிளப்பியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான‘கிஸ்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை அளித்தது. இதையடுத்து அவருக்கு கன்னடத்தில் வாய்ப்புகள் குவிந்தன. 2021-ம் ஆண்டு 'பெல்லி சான்டட்' என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார் ஸ்ரீலீலா. பவன்கல்யாண், விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். குண்டூர் காரம் படத்தில் நடித்தார். அதில், ‘குர்ச்சி மாடதபெட்டி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார். இவர் நடித்த ‘பகவந்த் கேசரி’ படம் வெற்றிபெற்றது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா தி ரூல்' படத்தில் 'கிஸ்சிக்' பாடலில் நடனமாடி கவனத்தை பெற்றார். தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக ராபின்ஹுட் படத்தில் நடித்துள்ளார். தமிழில் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். அடுத்ததாக, நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

உஸ்தாத் பகத் சிங் படத்தின் வெற்றிவிழாவில் “மாதவிடாய் பெண்களான நமக்கு பிரச்சனையாக இருக்கக் கூடாது. நான் மாதவிடாயின்போது பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். அந்தப் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. ஆண்களைப் போலவே நாமும் சம உரிமை வேண்டுமென பேசுவதால், மாதவிடாயை ஒரு பிரச்னையாகப் பேசுவது சரியா? நாம் இந்த விஷயத்தில் நம்மையே இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும். இந்த மனத்தடையை நாம் ஒரு சாக்காக சொல்லக்கூடாது” என்றார்.

இது சமூக வலைதளத்தில் அவருக்கு எதிராக மாறியுள்ளது. ஸ்ரீலீலா மருத்துவ படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளார். அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.