சென்னை,
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் களம் காண, மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். நகரங்களிலும், கிராமங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். முதியவர்கள், பெண்கள், முதல் முறை வாக்களிப்பவர்கள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து தேர்தல் சூழலை உற்சாகமாக்கியுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் தனது வாக்கினை பதிவு செய்தார். பொதுமக்களுடன் இணைந்து வரிசையில் நின்று வாக்களித்த அவர், பின்னர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் சுமுகமாக நடைபெற காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மாலை வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதிக சதவீத வாக்குப்பதிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.