வந்தே மாதரத்திற்கான அர்த்தம் என்னவென்றால் நான் எனது அம்மாவை வணங்குகிறேன் இதில் எங்காவது மதம் இருக்கிறதா ? மதமே இல்லாத ஒரு அர்த்தமுள்ள நாடு இந்தியா மட்டுமே என நடிகர் ரஞ்சித் மன்னார்குடியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் தெரிவித்தார்.
நடிகர் ரஞ்சித் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 40-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 100 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்று வந்தது. இந்த சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக ராஜகோபாலசுவாமி திருக்கோயில் முன்பு நடைபெற்ற இந்து முன்னணி பொதுக் கூட்டத்தில் திரைப்பட நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் “இந்தியா ஆன்மீகத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப்பெரிய தேசமாக உலகின் முன் நிற்கிறது. இன்ஸ்டாகிரமில் ரீல்ஸ் போடுவதற்கு இங்கு யாரும் வரவில்லை, உணர்வுடன் இஷ்டப்பட்டு வந்திருக்கிறோம். இந்திய சுதந்திரத்திற்காக எத்தனையோ லட்சம் பேர்களை காவு வாங்கிய அந்தமான் சிறையில் பட்டியலில் இந்திய சுதந்திரத்திற்காக பல பேர் தியாகம் செய்திருக்கிறார்கள்.
இங்கு நாம் வாழ வேண்டும் என்றால் யாரோ ஒருவர் உயிரை காவு கொடுத்திருக்கிறார் . முதன் முதலில் விநாயகர் சிலையை கொண்டு வந்தது 1893ல் பாலகங்காதரதிலகர். ஒரு சிலையை ஏன் தெருவிற்கு கொண்டுவந்தார்.
அந்நியர்களால் , ஆங்கிலேயர்களால் , அடிமைகளாய் சாதி ரீதியாக தனித்தனியாக பிரித்து இந்துக்களை புலம் பெயரவைத்த ஆங்கிலேய அரசுக்கு எதிராக சாதிகள் எல்லாம் இல்லை. அனைவரும் ஒன்று நாம்தான் இந்து. இந்த தேசத்தை காக்க நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்று இந்த விநாயகர் சிலை வைத்து வழிபாடு தொடங்கப்பட்டது . வந்தே மாதரத்திற்கான அர்த்தம் என்னவென்றால் நான் எனது அம்மாவை வணங்குகிறேன், இதில் எங்காவது மதம் இருக்கிறதா ? மதமே இல்லாத ஒரு அர்த்தமுள்ள நாடு இந்தியா மட்டுமே” என்றார்.