புதிய முயற்சியை மேற்கொள்ளும் தமிழ் திரைப்படங்களுக்கு நாம் அதே அன்பும் ஆதரவு தர வேண்டும் என சிம்பு ‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ‘மொத ராத்திரி’ படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மொத ராத்திரி’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியான ‘மொத ராத்திரி’ படம் முதல் வாரத்தில் ரூ.3 கோடி வசூலித்துள்ளது.
‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டி சிம்பு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “பிற மொழிகளில் வெளியாகும் நல்ல படங்களை தேடிப்பார்த்து அவற்றைக் கொண்டாடுகிறோம். அதேபோல, புதிய முயற்சியை மேற்கொள்ளும் தமிழ்த் திரைப்படங்களுக்கும் நாம் அதே அன்பும் ஆதரவும் தர வேண்டும் என விரும்புகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.