சினிமா செய்திகள்

‘நடிகர் சூர்யாதான் எனக்கு உத்வேகம் அளிக்கிறார்’- சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி, சமூக சேவைகள் மற்றும் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பகிர்ந்தார்.

நடிகர் சிரஞ்சீவி, தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினத்தை முன்னிட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சமூக சேவைகள் மற்றும் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பகிர்ந்தார்.

ரத்த தானம் மற்றும் கண் தானம் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து வருவதாகவும், மக்கள் தன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்ததால் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சேவைகளை தொடங்கியதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக தரமான கல்வி வழங்க வேண்டும் என்பது தனது அடுத்த இலக்கு என தெரிவித்தார். நல்ல கல்வி கிடைத்தால் ஏழை குடும்பங்களின் வாழ்க்கை முன்னேறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா தன்னை முன் மாதிரியாக கொண்டு அகரம் பவுண்டேஷன் நிறுவியதை நினைவுகூர்ந்த அவர், தற்போது சூர்யாவின் கல்வி சேவைகளே தமக்கு உத்வேகம் மற்றும் ஊக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.