சினிமா செய்திகள்

சந்திக்க மறுத்த பிரபல இயக்குநர் - கண் கலங்கிய நடிகர் வையாபுரி

தனக்கு சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னணியில் இன்ஸ்டாகிராம் இருந்ததாக நடிகர் வையாபுரி கூறியுள்ளார்.

இன்றைய இயக்குநர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள் என்று நகைச்சுவை நடிகர் வையாபுரி கூறியுள்ளார்.

வையாபுரி 1993 ஆம் ஆண்டு வெளியான ‘உடன்பிறப்பு’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இன்றுவரை பல நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார் .

தமிழில் அமர்க்களம், துள்ளாத மனமும் துள்ளும், ஜெமினி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் வையாபுரி. கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் முன்பு ஜொலித்தது போல் ஜொலிக்கவில்லை. திரைப்படங்களை தாண்டி சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்த நிலையில் இவர் கடந்த மாதம் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதில் தொடர்ந்து சினிமா தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்தார். இந்த சூழலில் அவர் கணக்கு தொடங்கி ஒரு மாதம் ஆகும் நிலையில் அதற்குள் அவரை 1 லட்சம் பாலோயர்களை பின்பற்றுகின்றனர். இது தொடர்பாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கும் அவர் இன்ஸ்டாகிராம் தொடங்கிய காரணத்தையும் பகிர்ந்துள்ளார்.

அவர் பேசியதாவது, “நான் எதுக்காக இன்ஸ்டா ஆரம்பிச்சேன்னா... ஒரு பெரிய புரொடக்‌ஷன் மேனேஜர், டைரக்டரைப் பார்க்கணும்னு அவர் ஆபீஸுக்கு கூப்பிட்டிருந்தாரு. நானும் போனேன். ஆனா அந்த டைரக்டரு, ‘அவரு பழைய ஆர்டிஸ்ட். நான் இல்லை’னு சொல்லிடுங்கனு சொன்னாரு. எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு. அது எனக்கு தெரியாது, அந்த மேனேஜர் வெளியே வந்ததும் டைரக்டருக்கு உங்கள பாக்க விருப்பப்படலன்னு சொன்னாரு. ஏன்னு கேட்டப்போ, இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கு இதுல இருந்து நெறைய பேர் புதுசு புதுசா வர்றாங்க. இவர்லாம் ரொம்ப பழசுன்னு சொல்லியிருக்காரு. அதை கேட்டுட்டு என் மனசு ரொம்ப பாதிக்க ஆரம்மிச்சிருச்சு.

அதுக்குப்பறம், நாம ஏன் இன்ஸ்டாகிராம் ஆரம்பிக்கக்கூடாதுன்னு தோணுச்சு. புது டைரக்டர்களுக்கு இன்ஸ்டா, பேஸ்புக் பிடிச்சுருக்கு. அதுக்காக அவங்களுக்கு நியாபகப்படுத்தறதுக்காவது அனுபவத்தை ஷேர் பண்ணிக்கலாம்னுதான் ஆரம்பிச்சேன். இந்த ஒரு மாசத்துல எவ்வளவு பேர் என் மேல அன்பு வெச்சுருக்கீங்கனு தெரிஞ்சுது. இது போதும் எனக்கு” என்று கண்கலங்கியபடி பேசியிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT