சினிமா செய்திகள்

கமலின் “சேயோன்” படத்தில் இணைந்தது பெருமை - நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ படத்தினை சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார்.

சென்னை,

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘காந்தா’படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீபோர்ஸ். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘மிஸ்டர் பச்சன்’ படம் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு' சென்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது தனது 26-வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படம், வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படம் ‘விருமாண்டி’ படத்தைப் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு, மதுரை பின்னணியில் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.

‘சேயோன்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வரும் நிலையில் கமல்ஹாசனை பாக்யஸ்ரீ போர்ஸ் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள கமல்ஹாசன் சார்... நீங்கள் என் தோள்களில் கை வைத்து வாழ்த்து தெரிவித்த அந்த நொடி என்னுள் இருக்கும் சிறுமி துள்ளி குதித்தாள். ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்ததில் பெருமை அடைகிறேன். உங்களை பெருமைப்படுத்தும் விதத்தில் சிறந்த பங்களிப்பை கொடுப்பேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT