சென்னை,
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் 'முல்லை' என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.