சினிமா செய்திகள்

நடிகை குலப்புள்ளி லீலா நடிப்பின் அடையாளம்- இயக்குனர் சிவகுமார் நாயர் பெருமிதம்

சிவகுமார் நாயர் இயக்கிய 'இறுதி' என்ற படத்தில் நடிகை குலப்புள்ளி லீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

சில்வர்டச் இந்தியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 'இறுதி' என்ற படத்தை சிவகுமார் நாயர் நடித்து, இயக்குகிறார். நயனாசிரி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வி.கே.ரகுநாதன், காந்தராஜ், அலிசா, உஷா நாயுடு, சாய் ரத்னா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, சவுந்தர்யன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குலப்புள்ளி லீலா நடித்துள்ளார். இவர் தமிழில் 'மருது', 'பராசக்தி' உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் சிவகுமார் நாயர் கூறும்போது, "குடும்ப உறவுகளை போற்றும் கதையாக இப்படம் உருவாகிறது. குடும்பங்களின் உன்னதத்தை இக்கால தலைமுறையினர் புரிந்து, தெரிந்து கொள்ளும்படி காட்சிகளை அடுக்கி கதைக்களத்தை தயார் செய்துள்ளோம்.

குறிப்பாக குலப்புள்ளி லீலாவுடன் இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. அவர் நடிப்பின் அடையாளம். அவரது அனுபவம் இந்த படத்துக்கு பலம் என்பேன். கேரளா, ஊட்டி, ஏற்காடு, சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் அனைத்து தரப்பினரின் விருப்பத்துக்குரிய படமாக நிச்சயமாக இருக்கும். குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் இப்படத்தின் தலைப்பு உள்ளிட்ட இதர அப்டேட்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும்", என்றார்.