சினிமா செய்திகள்

'பிட்காயின்' மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு ஜாமீன்

ரூ.6 ஆயிரத்து 606 கோடி பிட்காயின் மோசடி வழக்கில் ராஜ்குந்த்ராவிற்கு மும்பை சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

மும்பை,

ரூ.6 ஆயிரத்து 606 கோடி பிட்காயின் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் 16 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு பிட்காயின் மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மற்றும் தொழில் அதிபர் ராஜேஸ் ராம் சாதிஜா சேர்க்கப்பட்டனர். ராஜ்குந்த்ரா பிட்காயின் மோசடி வழக்கில் தொடர்புடைய அமித் பரத்வாஜிடம் இருந்து ரூ.150.47 கோடி மதிப்பிலான 52 லட்சத்து 79 ஆயிரத்து 755 பிட்காயின்களை வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பிட்காயின்களை திரும்பி ஒப்படைக்க ராஜ்குந்த்ரா மறுப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா, ராஜேஸ்ராம் சாதிஜாவுக்கு சிறப்பு கோர்ட்டு கடந்த மாதம் சம்மன் அனுப்பி இருந்தது.

இந்தநிலையில் நேற்று ராஜ்குந்த்ரா மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவருக்கு பிட்காயின் மோசடி வழக்கில் சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.