சினிமா செய்திகள்

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம்

இப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை என்று திரிஷா பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தவெக தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் நயினார் நாகேந்திரனுக்கு அவரது பேச்சுக்காக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை திரிஷா, நயினார் நாகேந்திரன் கருத்து தொடர்பாக தனது வழக்கறிஞர் வாயிலாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மாநில அரசியலில் உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி பேசலாமா? என்றும், இப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. அவமரியாதையை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்க வேண்டாம். அரசியல் நிலைப்பாட்டில் நடுநிலையுடன் இருக்கவே நான் விரும்புகிறேன். தனக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் என்னை தொடர்புபடுத்தி பேச வேண்டாம். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று மதுரையில் பேசிய நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் திரிஷா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தனிப்பட்ட முறையில் யார் மனதும் புண்படும் வகையில் பேசமாட்டேன்” என்றார்.